20201028

யாத்தலும் நெய்தலும்

 

பாய்ந்து செல்லும் அலைகளில் சலனம்

கடலின் அணைப்பில்

சிறுநண்டின் கவினுலகம்

'விழிகள் மலர்கல்ல கொடிய கொடிய

கண்கள் கயல்களல்ல கூற்றம் கூற்றம்'

'யானும் நீயும் எவ்வழி அறிதும்'

 

அலைகள் மணற்பரப்பில் கொஞ்சி விளையாட

உதித்த அதிகாலையில்

நான் அளைந்த மண்ணில் வெகுதொலைவில்

அவள் தந்த அனைத்துக்கும் சாட்சியாய்

நான் மலர்ந்தேன்

 

எங்கள் அதிர்வுகள் லயத்துடன் எழுந்தன.

மலர்ந்திருந்த மாலையில் உணர்ந்து கொண்டோம்

வாழ்வு மகிழ்ச்சியானதும் தான்

கோபித்துக் கொண்டு கோடை போனதும்

அழகொளிர வந்தது வேனில்

வானம் வீசும் பெருந்துளிகளில் நனைகிறது காதல்.

அனலடித்த நாட்கள் விலகிப்போகட்டும்

குளிர் உறைக்கும் கொடுநாட்களும் கடந்து செல்லட்டும்

இளங்காலையில் வசந்தமெனைத் தட்டியெழுப்பட்டும்.


11.10.1991


தளங்களும் முகங்களும்

 

கையெட்டும் தொலைவில்

ஊர்களும் பயின்ற முகங்களும்;

போயிருந்திருக்கலாம்

யாரும் காணாமல் களவாகவாவது

 

பொழுதுசாய்கையில்

எழுகின்ற முகங்கள்

காற்றோடும் மண்ணோடும்

கடலோடும் கரையோடும்

கரைந்த முகங்கள்

உர்ரென்ற முகங்கள்

களையிழந்த ஏராளமேராளம் முகங்கள்

உயிரோம்பும் முகங்கள்

 

கண்ணெட்டும் தூரத்தில்

மெய்நிகர்த் தளங்களும்

மெய்நிகர் முகங்களும்

வியர்ப்பதுமில்லை

யாரும் விதைப்பதுமில்லை

அறுப்பதுமில்லை.


04.01.2017


20161226

பிரிவு

இதயம் அழுந்தித் துடிக்கிறது எதையோ இழந்தாற்போல்

நெஞ்சம் அதிர்கிறது

நாம் பிரிந்து போகிறோம்


தவிர்க்க முடியா இந்த பிரிவும் இந்த வாழ்வும்

பள்ளி உறவுகளும் நினைவுகளும்

நாங்கள் பிரிகிறோம்

நீங்கள் என்ன எண்ணுகின்றீர்கள்


கற்பனை கனவுகளை ஏந்திய ஓடங்களின் அசைவு

கனத்துப்போன நினைவுகள் ஏந்திய ஓடங்கள் எங்கெங்கோ

ஆறுகள் கடல்கள் தாண்டப பிரிந்து பிரிந்து தனித்து

நீண்ட பாதை காடுகள் மலைகள் ஆறுகள் பாலை நிலங்கள்

இன்னும் எத்தனையெத்தனை

எவற்றைப் பற்றியும் அஞ்சவில்லை


பிரிவின் வேதனையை எப்படியுரைக்க

உங்கள் கரங்களை அழுத்திப்பிடித்துக் கொள்கிறேன்.

எங்கள் உறவுகளில் ஆழ்ந்த அர்த்தம் பரவட்டும்

நான் எனது பாதைக்கு செல்ல ஆயத்தமாகிறேன்.

நல்லது மிக நல்லது நாம் விடை கொள்வோம்


19880314



திசை , முகம் 43 (1989.11.03) பக்கம் 9, 
 K. பாபு என்ற வீட்டிலும் ஊரிலும் அறிந்த பெயரில் வெளிவந்தது




சூரியவெளி

வயல் நிலத்திலுள்ள மலையே
நீயுன் எல்லைகளிளெல்லாம்
செய்த பாவத்தின் நிமித்தம்
நானும் ஆஸ்திகளையும்
உன் எல்லா பொக்கிஸங'களையும்
உன் மேடைகளையும் சூறையிடுவிப்பேன்.
                                           (ஏரெமியா 17 அதிகாரம்)

சமவெளியில் எழுந்த மலைபற்றி
ஊரில் எல்லோரும் குசுகுசுக்கிறார்கள்.
சூரியவெளியில் உலவும் மனிதர்கள் பற்றி ஏராளம் வதந்திகள்
வல்லை முனியப்பர் கோவிலடியில் கிளையெறிந்த சவுக்குகளைச் சிதைத்துப்
போன மாரியில் எழுந்த மலையது.

உச்சியி;ல் பொங்கிய மக்னா குழம்பு
உப்பளத்துக்கு செல்லும் பாதையூடு
சுடலை மரங்களுடு
வழிவமைத்து
ஊரைச்சுற்றி மண்முகடாய் எழுந்தது.

வயலிடைக் கிடந்த கோவில் வெறிந்சென்றது.
வயலிடை உலவும் புதிய முகங்கள் பற்றி
ஏதேதோ சொல்கிறார்கள்.
ஆவதார ரகசியங்களை அறிவிக்க வந்த தூதர்கள் என்கிறாhர்கள்.
உளவாளிகள் என்கிறார்கள்
புல்லுப்பிடுங்கிச்செல்லும் பெண்டுகள் விலத்தியே செல்கிறார்கள்.
அவர்கள் சன்னதி கோவிலில் காவடி எடுத்ததாய்
அடியார் மடத்தில் அன்னம் உண்டதாய்
வல்லைப்பாலத்தடியில் தூண்டில் போட்டதாய்

உடனுக்குடன் ஊருக்குள் கதை வருகிறது.

புதர் மண்டிப்போன மனைகள் வேட்கையுடன் அழைக்கின்றன.
தெரிந்தவர்கள் எங்கெங்கோ ஓதுங்கி விட்டனர்.
ஓமென்று போன உறவுகள் நாலுவரிகளுடன் நின்றுபோயின.
கிழவர்கள் கதைப்பதை யாரும் விரும்புவதில்லை
மகிந்தார்பரிக்க சுருக்கம் விழுந்த காலங்கள் விடுமாவென்ன

இறுகிப்போன முகங்களுக்கப்பால் பூப்போல மனிதர்கள்
இருந்தும் நெருங்கத்தான் முடியவில்லை.

சமவெளியில் அறுவடை முடிந்து விட்டது.
பனியில் கிடக்கும் வைக்போல் போர்களிடையே
சிற்றெறும்புகளின் எளிய வாழ்க்கை.
வரப்புகளில் எலிகளின் தானியக் களங்சியங்கள்
வானத்தெல்லை வரை மஞ்கள் பாரித்துள்ளது.
தூரத்தே கரும்புள்ளியாய்
புலம்பெயரும் சைபீரியப் பறவைகள்
நீளும் சிறகுகளில் இட்டுக்கட்டிய கதைகளுக்கெல்லாம்
பதிலுரைக்காமல் பறந்து போகிற அழகு
நான் மடத்துபுலம் கள்ளுத்தவறணையில்
தன்னந்தனியே

மறையும் சூரியனில்
நேற்று முளைத்த மலை பளபளக்கிறது
என் சிறகுகளை ஒடித்துவிட்டு

30 ஓகஸ்ட் 1997

ரிவிரெச 1, 2 என்ற சங்கேத பெயர்களுடன்( ரிவிரெச என்பது சூரியவெளி என பொருள்படும்) மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் 96 முற்பகுதியில் யாழ்ப்பாணம் முற்றாக இராணுவகட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
வல்லை என்பது வடமாரட்சியை பிறபகுதியுடன பிரிக்கும் பரந்த வெளி.
வெளியீடு: கலைமுகம் (கலை 14 முகம் 1)

நீதிதேவர்

இனவாதப் புழுதியில் தலை புதைத்திருந்தது

இந்நிலத்து தீய்ய்ப்பறவை மட்டுமல்ல

செங்கோலால் வருத்தியது நீதிதேவருமென்.


2002

குண்டலினி ஆற்றுப்படை


அலைகள் நடுவிலோ கண்காணா தேசத்திலோ
கற்று மயங்கியோ காட்டின் நடுவிலோ
நூல்களின் இடையிலோ நாட்கள் தொலைய
வந்தவழியை இரைமீட்கும்
என் நிலத்தோய் என் நிலத்தோய்

திரைகடலோடியுங் கிடைத்திலதோ
மேலோடி மிகுகொண்டும் கிடைத்திலதோ
பேர்சொல்ல பிள்ளையும்
பெருமை பேசவொரு தத்துவமாய்
அலைகளில் தத்தளிக்கும்
என் நிலத்தோய் என் நிலத்தோய்


காயாய் கிடந்தவுடல் கனிந்து போகையில் தான்
போதிசத்துவன் கண்டு பயந்த மூப்பும் பிணியும் வந்துற்றது.
வாசல் வழியே விரும்பா வரவாய்
அஞ்ஞாத வாசம் உற்றபோதே

உடல் தீராவலியேற்றது என்றன் மனவலிபோல
என் பிணி என் வாழ்வு என்றானது தத்துவம்
வாழ்வு நான்சுவராய்; போனதொருகாலை
தைரியந் திருந்து உளநோயுற்ற காலை
தன்னார்வத் தொண்டன் யோக நூலொன்று தந்தான்


வாழ்வை பழிக்கும் சித்தாந்தம் மறுக்கும் தத்தவம் இருந்தது
'உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்'
உரத்து ஒலித்தேன்
'உடலை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன்'

என் நிலத்தோய் என் நிலத்தோய்
மூச்சும் பயிற்சியுமாய் உற்ற பிணி போனபின் உணர்ந்தேன்
உடல்தான் தத்துவ ஊற்று
மூப்பும் பிணியும் தள்ளிப் போகும்
சாகாகலை யோகமென்றுணர நீளப்பயணித்தேன்

கூட்டுப்புழவாய் புரண்டாலும் வண்ணத்தாய் மலரும் வாழ்வு வாய்க்கும்
சுருண்டு கிடக்கும் உள்ளுறை சக்தியே குண்டலினி
பிராணன் வளர்க்க பெருகும் சக்தி
தேவதையாய் ஆத்திகம் பேசும்
இயங்கியலாய் நாத்திகம் பேசும்
என் நிலத்தோய் என் நிலத்தோய்

20011101

சிறையிருத்தல்

ஏலோய்ய்யீ..
ஏன் என்னைக் கைவிட்டீர்
உச்சஸ்தாயியில்  எழுந்தது இறுதி ஓலம்
வெள்ளி இரவில் ஆவி ஒடுங்கிற்று
மூன்று நாட்களுக்குள் மீளவும் உயிர்த்தது
இரண்டாம் வாழ்வுக்காய்

வானம் கைதுசெய்தபின்
மண்ணுடனான சம்பந்தம் அற்றுப்போனது
வற்றாத நதியென்ற மாயையும் அழிந்தது
காட்டாறாய் பாய்ந்த நிலமெல்லாம்
வெட்டாந்தறையாய் வெடித்துலர்ந்தது

தலைகீழாய்த் தொங்கி நீரி;ல் மூச்சிழந்து
காவடியாடி நகமிழந்து உடல்சிதைந்து
உணர்விழந்து உயிர் சோர்ந்தது.
கரைசேர முடியாமல் கடல் சேர்ந்தன ஜீவன்கள்

வலியும் நிராசையும்
நெடுநாட்கனவு சிதைந்த வேதனையும்
சுமந்து வரும் இந்நதி எங்கிருந்து ஆரம்பிக்கின்றது.
குக்கிராமத்தின் குடிசையில் இருந்தா
நகரத்தின் முடுக்கில் இருந்தா
வனத்தின் ஒற்றையடிப் பாதையில் இருந்தா
தீவெங்கும் பரந்திருக்கும் சோதனைச்சாவடியில் இருந்தா

தமையாட்கொண்டு நோயும் பிணியும் ஈய்ந்து
வேருடன் பிடுங்கிபெறிந்த
காவல்ஜந்துக்களின் கீர்த்தியினை உச்சரித்துலவும் பாதிமனிதர்கள்
கொடுப்பதை உண்டு, உறங்கி, உயிர்நிறுத்தி
உளப்புண்ணுடன் நாட்கடத்தும் முகமிழந்த மனிதர்கள்

எப்போதோ நாகரிகத்தின் தொட்டிலாய் இருந்த
நதியொன்று அருகே ஓடுகிறது
பெரும் மதில்களுக்கப்பால் பால்மரங்களின் பச்சைநிறம்
கற்பூமியின் அவலமூச்சில்
அவலம் நிறைந்த  முகங்களிடையே
வாழ்வின் அர்த்தம் புரிகிறது.


காலத்தை தேவன் என்றதும் பாசத்தை கயிறு என்றதும்
எடுத்துரைப்பார் எவருமின்றி புரிகிறது
குரு இல்லை பீடம் இல்லை
கல்லால மரத்தடியில்
சொல்லாமல் சொன்ன பொருளும் புரிகிறது
திரும்பவும் திரும்பவும் வேதனை கதவைத் தட்டியது
வெறுத்து திறந்த கணத்தில்
காலவெள்ளம் காபாலத்தை நிறைத்தது

வயல்வெளிகள் கண்களுக்ககப்படவில்லை
பிடித்தமான கடலுமில்லை அலைகளில்லை
கண்களின் சலனத்திரையில்
கரையும் காட்சியில் இனிமையில்லை
ஆதரவாய் தோள்தடவ ஆருமில்லை
நெகிழ்ந்துறங்க நிழலில்லை

வெளியில் இருப்பதாய இரண்டாம் வாழ்வுக்காய்
எத்தனை மாதம் காத்திருப்பது இந்த கருப்பையில்
இரண்டாம் வாழ்வைக் காணாமல்
கொலையான சகாக்களின் ஓலம் இன்னமும் ஒலிக்கின்றன
ஆறவழியின்றி ஆன்மா அடங்கும்

அன்புற்றமைந்த வாழ்வின்
எச்சமாய் வரும் ஓரிரு கடிதங்கள்
நினைவுப் பாதையில் தலைசாய இரவு அழிகிறது
இளமையும் தான்.



2001.11.01

களுகங்கையின் ஓரத்தில் றப்பர் மரங்களிடையே மல்வத்தையில் அமைந்துள்ளது களுத்துறை சிறை. 1997-12-12 இல் சிறையதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் சிங்கள தண்டனைக் கைதிகள்( அச்சு குத்தியவர்கள்) பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் பிடிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்து தமிழ் கைதிகளை தாக்கினர். தர்மலிங்கம், சிவம், ஜெகன் ஆகியோர் வெட்டிக்கொல்லப்பட்டனர். பிற்பாடு 2000 தை 6ம் 7ம் திகதிகளில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறை அதிகாரிகளால் தாக்கப்பட்டனர். இதன் போது யேசுதாசன், சிறீகுமார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

கோடையின் மகன்

நிலத்தையறிய முன்னரே நீரையறிவேன்.

பலமாதம் பனிக்குடத்தில்
புதையுண்டு கிடந்த நினைவுகள் இன்றில்லையெனினும்
நீரை ஜென்ம பந்தமாய் நேசித்து வந்துள்ளேன்.

பூவுலகுக்கு பாய்ந்த கணத்தில் பிணைக்கப்பட்ட
கோடைநில நினைவுகள்; தொடர்கின்றன
தொப்பூள் கொடியறிந்தும் தொடர்புகள்
ஆயுளுக்கும் தொடர்வது போல்.

தொட்டளைந்த மண்ணின்
வெகுதொலைவே எஞ்சிய நாட்கள்
நஞ்சேறிய குருதியாற்றில்
நாடி நரம்புகளில் துயரின் சாயல்

கல் தோன்றி மண் தோன்றா காலத்துக்கு முன்னமே
புரட்சிகர உலகு முன்னால் புணரக் காத்திருக்கென்ற
அரசியல் செய்த காலத்துக்கு முன்னமே
நீரைநோக்கிய பயணம் தொடங்கிற்று.

ஆகாய கங்கைகள் நிலநதிகளுடன்
சங்கமிக்கும் கதைகளை நானறிவேன்.
கோடைகால வெள்ளம்போல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய் நினைவுகள்

பால்நிறப் பொய்கைபோல் பற்றை நடுவே
வழி பார்த்திருந்தது நச்சு வட்டம்
பல்லாயிரம் பாதச்சுவடுகள் அழுந்திய பாதையில்
நடக்க நடக்க நிழலும் சுட்டது

குளிர்ந்திருந்தாலும் கோடையின் மகனல்லவா

கொடுமைகளை நான் அறிவேன்.

செம்புலம்




1
அறுத்துக்கொண்டு போன பட்டத்தை தேடித் திரிந்த
பாதை நெடுகிலும் கிடந்தது
எல்லா கற்பிதங்களையும் கலைக்கும் முள்

2
தோப்பவிழ்ந்த மந்தியாய்
தனித்தலைந்த காலம்
பல்மிருகமாய் பாம்பாய்
பேயாய் கணங்களாய் வழிநடந்தனர்
செம்புலக் கனவூகள் சிதைந்து போனபின்
எத்திசைக் காற்றோ அத்திசை போயினர்

3
வெறுமையான வானத்தில்
தனித்துப்போனஉருவமேயற்று சிதைந்த
ஒரு முகிலைப் போல்.
வருவதும் போவதுமான எல்லா ஊர்திகளிலும்
பொழுதுகளை கரையவிட்டு


பழகு மொழி மறந்து பரிபாசை பயின்று.
ஓடு மீனும் விட்டு உறு மீனும் விட்டு.
கொக்கும் இல்லை.
அதன் குத்தும் இல்லை.
ஆற்றுநீர் விழுந்தாலும்
அலைகள் உப்புக்கரிக்கின்றன

4

கால இடுக்குகளில் புதைந்த முகங்கள் எழுகின்றன முன்பின்னாக
வெற்றிக்கொக்கரிப்பின் (Triumphalism ) உரைக்கல்லான பெண்ணுடல்

‘இடி விழ’ ‘பற்றி எரிய’ ‘பாம்பு கடிக்க’
‘பாழ்பட்டுப்போக’ ‘பரிநாசமடைய’
சாபங்களை தொடர்கின்றன
வெற்றுடல் மீதான வெறி கொள்கை வழிப்பட்டது
சடங்காக்கப்பட்டதும் மகிமைப்படுத்தப்பட்டது
ஆழியாநிழலாய் தொடரும் வெறிக்கூச்சல்
புல்லாய் பூடாய் புழுவாய்
மரமாய் கல்லாய் கழிகிறது காலம்

வெற்றிக் கொக்கரிப்பின் பின்னின்று
அன்பெய்யூம் பகைமறப்பெனும் பெருங்கதையாடல்
காலத்தை பின்னதைக்கிறது.

‘வரப்புயர’ என்றாணை பிறந்தது
நீர் உயர்ந்தது நெல் உயர்ந்தது.
பின் போய் விட்டது
பொறுமையிழந்து பிச்சையெடுக்க

5
சலனமுற வைக்கிற கீதங்கள்
தொடரும் செம்புலக் கனவூகள்
தானியற்றிய பெருநீர்ச் சுழிகளில்
தனையிழக்காமல் பாய்கிறது நதி
மணற்கும்பிகளுக்கு பின்னே
பின்னதைக்கும் அலைகளுடன் பெருங்கடலாடல்.
மனதை தைக்கும் கடலின் விளிம்பு
ஆட்புல எல்லைகள் தாண்டியூம்
வளைந்து போகிறது ஆழி







2012.04.10






குவார்னிகா- 41வது இலக்கிய சந்திப்பு

20160719

கபாலி !

'கப்'பென அடிக்கும் அழுகலின் வீச்சம்

அழுகலை உண்டு திரண்டெழும் ரஜ்ஜ்ஜன்னீ !

போற்றி போற்றியென பரிந்ததிரும் பார்தீனியம்

தலைதலையென ஒத்ததிரும் டார்த்தீனியம்


நீளும் அழுகல்வளரியின் நீழலில் கரைகிறது

முழுமையையும்

முள்ளிவாய்க்காலில் தொலைத்த மண்.



17.07.2016














குறிப்பு

1987 இந்திய படைவருகையுடன் ஈழத்தில்; பரவியவண்ணம் இருக்கும் நச்சுசெடி பார்தீனியம்
தமிழ் சிறுகதைபொன்றில் உருவகமான நச்சுசெடி டார்த்தீனியம்

20120321

அவலம்


பறந்து போகிறேன் ஜன்ம பூமியே

உலகைப் பார்க்க வேண்டும்!

இளமை உலர்வதன் முன்

உன்மேல் படர வேண்டும்.


டிசெம்பர் 93


பகுதி - அ : கிளாலி




முன்னுரிமை பெற்றவர் முன்னால் நிற்க!

நலிந்தவர் பயந்தவர் ஒதுங்கி நிற்க!

ஓட்டிகள் மந்திரம் ஓதுக!

நுரைத்தெழும் ஜலமே வழிவிடு!


மூடுண்டு போனது யாழ்நாடு

வழியும் போனது

எழுந்தன அவலக் குரல்கள்!

வானம் கேட்டது

திசைகள் யாவும் கேட்டன!

காற்றும் மழையும் பனியும்

நிலவும் இருளும் கேட்டன

நீண்ட காலமாய்!

போகும் பாதையில் சுழிகள்

உண்டென வானம் உரைத்தது.

வானொலி உரைத்தது

உயிரும் பணமும் ஈர்க்கும்

கரும் பொருள் உண்டென!

உரப்பையும் பயணப் பொதியும்

அரைக்கால் சட்டையும்

நனைந்த கோலமாய்த் தேவர்கள்

கண்டங்களை இணைத்த கடல் வாசிகள்

பனிக்கண்டங்களில் உலவிய

அதிமனிதர்கள்.

வீடு வாசல் தோட்டம் துறவு

மா பலா அனைத்தும் ஒப்புக்

கொடுத்தோடும்

பயணிகள்

பேச்சற்றுப் போனவர் கதைப்பவர்

வணிகர் குழந்தைகள்

பெற்றோர் எனத் தென்னை மரத்திடை

அடங்கிக் கிடந்தனர்.



கிளாலிக் கரை

கூவி விற்போர் வியாபாரம் செய்க!

கூடிக் கதைப்போர் ஒன்று சேர்க!

தனித்திருப்போர் கனவு காண்க!

இரவு வரட்டும்

இருளும் வரட்டும்

காற்றே அமைக!


போகுமுன் பெயர்களைப் பதிவு செய்க!

கடலிலே அலை மோதும்

வள்ளமெழுந்து வீழும்!

வரிசைகள் முக்கியம்

வள்ளங்களின் எண்களும் முக்கியம்

இருவராய் மூவராய் அறுவராய் எனினும்

வரிசைகள் முக்கியம்!

வீசும் கந்தகக் காற்றும்

நாறும் சேறும்

எரிச்சல் வயமாய்ப் பயணிகள்

வரிசைக்கு

வள்ளத்துக்கு

இடத்துக்கு

முந்துக

வரிசைகள் மீறுக!

ஒழுங்குகளைக் கலைத்திடுக!

காவல்துறை வரட்டும்!

அவரவர் உடமைக்கு

அவரே பொறுப்பு!

உயிருக்கும் அவரே தான்!

நல்லது

இனி ஒட்டிகள் வருக!

தெற்கே யமனின் திசையில்

பதினைந்து பதினைந்தாய்

அழைத்துச் செல்க!

நோய் தரும் ஜலத்தினை

வானம் ஈய்ந்தது.

வெற்றிடங்களை ஈய்ந்த பாரிய வெளி

போர் உலாப் போன பல மாரி காலங்கள்

பிஞ்சும் பூவுமாய்

சிசுக்களைக் காவு கொண்ட ஏரி.

மண் தின்ற கடலிடையே

பளிச்சிடும் ஒளிப்பிசாசுகள்

பயணம் நெடியதும் கொடியதும்

ஊதல் காற்றும்.

ஜலதாரை வீசும் கடலும்

குளிரும் பயமுமாய்ப் பயணம்.

திடீரெனத் துள்ளிப் படகில் பூத்த

மீனினை என்னிடம் தந்தாய்

நான் கடலிடம் தந்ததன்

உயிர் ஈய்ந்தேன்.

எதிரியானவன் எப்பவும் கூட இருப்பதாய்

வேதத்தில் உள்ளது.

நீயென் எதிரி

நான் பேசிடவில்லை.

நீ காட்டிக் கொடுப்பனவாய் இருக்கலாம்!

நீயும் அறிவாய்

நானும்

காட்டிக் கொடுப்பனவாய் இருக்கலாம்!

வேதத்தில் கற்பிக்கப்பட்டதை

செய்பவன் ஆனேன்

நீ மட்டுமென்ன?

ஜலம் வீசி ஆடும் கடல்

கொடுங்குளிர்

இது மழைக்கால கும்மிருட்டு

கொல்லும் கூதல்.

எங்கேயந்த ஒளிப் பொட்டுக்கள்?

எங்கேயந்தத் துருவ நட்சத்திரம்?

எங்கேயந்தக் குருசு?

அவலத்தொனி

அடி வயிற்றில் ஊர்ந்தது

ஊழி மழையில் ஓட்டிகள் குரல்

திசை தெரியா அவலம்

வானமே வழிவிடு

இல்லை

வானம் வழி விடவில்லை

ஒரு பாட்டம் பாடியது.

பாவியானவர் எம்மிடையுள்ளதாய்

ஓட்டிகள் உரைத்தனர்

யாரந்தப் பாவி?

யாரந்தத் துரோகி?

அவனைக் கடலில் தள்ளுக!

திருவுளச் சீட்டினைப் போடுக

எவனோ அவனே பாவி

எவனோ அவனே துரோகி.

மழை கொடியது.

குளிர் கொடியது

மனிதர் கொடியவர்.

பேய் பிசாசாய் அலைபவர்

மனிதர் பசித்தவர்

மிகமிகப் பசித்தவர்

எனைக்கடலிடம் தந்தனர்

நான் அலைகளில் வீழ்ந்தேன்.







பகுதி - ஆ : மாநகர்




ஆர்வத்துடன் நெருங்குகிறேன்.

போவதற்கு முன்

எனைத் தந்து விட்டுப்போகிற அவஸ்தை

போய்க்கடந்த தேசமொன்றின்

பெரும் பாவச்சுமைகள்

இளமை தசைக்கணுக்களில்

துவண்டு போன தோல்விகள்

பரணில் தூங்கிவிட்ட

கிளர்ச்சியூட்டிய எண்ணங்கள்....



பேர் பெற்ற வழிகாட்டியின்

முட்டாள் சீடனே!



தப்புகிற வேகத்தில்

விட்டோடிப் போன நிலத்தில்


படரும் செடிகளாலொரு

கிரீடம் செய்!

பொறுப்பற்றவனும் செலவாளியும்

அமைதியற்றவனுமாகி

போதையில் கரைந்த நாடோடியே!

தென்னந் தோப்பும் சவுக்கம் காடும்

மணற்பரப்பும் பரந்த கடலுமாய்

நீ பெற்ற இரவுகளை

எதனிடத்து காவு கொடுத்தாய்?


வேர்கள் படர

நீ யாசித்த நிலத்தில்

எதைத்தான் பயிரிட்டாய்?


வனவாசத்தில் ஒதுங்கிய மரக்குடில்களும்

சிற்சில மனிதர்களும் போலல்ல நரகம்

மாளிகையும் மயக்கமுமாய் நினைவுகள்.

தூற்றப்பட்ட மனிதர்க்கு

புனர்ஜென்மம் கொடுத்த வரிகளை

வாசித்துக் கொண்டிருந்தேன்.

அதல பாதாளத்தின் குரூர அழகு

இது எத்தனையாவது பயணம்?

இது எத்தனையாவது குகை?

இது எத்தனையாவது குரல்?

சந்தித்த எத்தனையாவது

மனிதன் நீ?

தற்கொலையும் நீராசையும் நிறைந்த

புதிர்க்கணக்கினை நீயுரைத்த பின்

இரவுகளைக் கடக்க

யாரும் துணைவரவில்லை.

எதுவரை உண்மையினை அவர்கள்

கொண்டு சென்றார்கள்

அதுவரை நான் வந்தேன்.

எங்கு வைத்து கொலை செய்தார்கள்

நான் அங்கிருந்தேன்.

என்னால் முடியாத பேரழிவினை

ஊழியில் இயற்ற

எனையங்கு தயார்படுத்தினார்கள்.

நீண்ட தொலைவிற்கப்பால்

அந்நியமான மலையின் அந்தரில்

பாதாளம் வரை பரவிய பிரானே!

ஆவி பதற அலையெறியும் கடலே

கணக்குகள்

மீளவும் தீர்க்கப்படுகையில்

நான் அஞ்சுகிறேன்.

வரண்டு போன சொற்களுடன்

ஒரு கவிதை முடிந்து விடக்கூடும்

என்பதே!

பாழாய்ப்போன பிரிவின் வேகத்தில்

கிராமத்து ரயில் தடங்களில்

வேகத்தோடு பாயும் நதி.

நெடிய பயணங்களின் முடிவில்

சந்தித்த பிரியம் மிக்க

பெண்களின் நெருக்கத்தில் தத்தளித்து

வாழ்த்துச் செய்தியுடன்

விடைகொண்டு.....

போய் வருகிறேன்.

ஜனசந்தடி மிக்க தெருக்களில்

ஓடுகின்ற ஊர்திகளில்

தெறிக்கும் கணங்கள்.....

பேச வேண்டா

சிரிக்கவும் வேண்டாம்!

பனிபோல் கண்களில் படரும்

மெல்லிய திரையில்

சேதிகளைப் பகிர்ந்து கொள்வோம்

போய் வருக!




பகுதி இ : காட்டாறு



இடி மின்னல் மழை காற்று

கடலடி புயலுடன்

எழுந்தது மாரி!

நீர் கோளமாய்ப் பாயும் வெள்ளம்

ஊழி முடிவு போல்.

அச்சந் தரும் கொடூர மழை!

ஆத்மாவில் திருப்தி

சொந்த நிலத்தில்

பாதம் பதிகையில் கிளர்ச்சி!

கடலும் காடும்

வெள்ளமும் குளமுமாய்

சட்டென விரியும் கிராமம்

வயலும் தென்னையும்

மீனும் நெல்லும் நிறைந்த பூமி.

நீங்கள் எங்கு சென்றீர்கள்?

யாரைப் பேட்டி கண்டீர்கள்?

எதை அறிந்து கொண்டீர்கள்?

ஆயுத பேரங்களின் பின்

இரவில்

வங்களா விரிகுடா தாண்டும்

ஆயுதங்களின் கணக்கினை விடுவோம்.

வனத்திடை பயிற்சியை

நோய் கருதி முறித்துத் திரும்பிய

முதியவரையும் விடுவோம்.

நியாயங் கூற ஏலா கண்ணீருடன்

விரட்டப்பட்ட மக்களிடையே

விடுபட்டு உதிரியாய்

ஒன்றிப்போன ரசூலின் கதையினையும்

விடுவோம்.

மெல்லவும் ஏலாமல் விழுங்கவும் ஏலாமல்

எல்லைக்கப்பாலும் இப்பாலும்

யாரும் உரிமை கோரப் பிரதேசத்தில்

நெஞ்சை நிமிர்த்திப்போம் ஜீவியே!

எங்கு முளைத்தெழுந்தேனோ

அங்கு

ஒரு துண்டு நிலத்தில் படருமென்

வேரினை இழக்க எனக்குச் சம்மதமில்லை!

பெருக்கெடுத்தோடும் வெள்ளம்

வேரினை அரித்துப்போகும்

காட்டாறு

மிஞ்சிய வேகத்தில்

எதனையும் விட்டு வைக்கவில்லை

உயிரும் பொருளும்

கல்வியும் செல்வமும்

நூற்றாண்டுகால வரலாறும்

அச்சமும் நாணமும்

குலமும் கோத்திரமும்

ஜாதியும் பேதமும்

சுழித்தோடும் ஆற்றோடு

தேசவழமைச் சட்டங்களும்

உரிமைகளும் விதிகளும்

விழாக்களும் விழுமியங்களும்

பாவமும் பாவத்தின் கூலியும்

அனைத்தும் நதியின் வேகத்தில்

ஆற்றுப்படுக்கையில்

ஆற்றோரச் சிறுகல்லும்

பளிங்காய் ஒளிர்கையில்

குருடாய் முடமாய்

ஏராளம் ஜீவிகள் ஓய்கையில்

இனம் புரியா இசை

கண்தெரியா இசைஞனின் பாடல்

அலைகளில் எழுகின்ற முகம்

ஓவென்றிரைச்சலிடும் கடல்.

தந்தையும் தாயும் வாழ்ந்தலுத்த

நிலத்தில்

ஓலைக்குடிலில் தனியிரவு

இரவு விரிந்தது.

பொழுதுகள் போய்ப்படுக்கும்

பின்னிரவில்

நம்பிக்கையுடன் பிரியமான

முகங்களை எழுதத் தொடங்கினேன்.




பகுதி - ஈ : அழைப்பு

இனத்தில் பெரிய ஜாதிகள் நாங்கள்

பிழைக்க வழியில்லாமலே

எவர்க்கும் பெருமை கொடுக்கும் செந்நெல்

விளையும் தறையை அணுகினோம்.

சேர்ந்தபடியே நம்முடனே

சூழ்ந்த பண்பினர் யாவருக்கும்

சுறுக்கு விளையும் தறைக்கு வந்தோம்.

துறக்க வேண்டாம் மானிடரே!

துறக்க வேண்டாம் மானிடரே!


13.02.1995

சரிநிகர் இதழ் 75- யூன் 291995

குறிப்பு:

1.  'யார்க்கெடுத்துரைப்பேன்?' என்ற குழந்தை ம.சண்முகலிங்கத்தின் நாடகத்தில் வருகிற நாடோடிப்பாடல் சிறுமாற்றங்களுடன் பகுதி - ஈ அழைப்பு ஆக வருகிறது.

2. இலங்கையரசு - புலிகள் பேச்சுவார்த்தை முறிந்து இரண்டாம் ஈழப்போர் 1990-ல் தொடங்கியவுடன் இலங்கையரசு யாழ்ப்பாண குடாநாட்டுக்கான பொருளாதார தடையை விதித்து யாழ்;ப்பாணத்திற்கான தரைப்பாதையையும் ஆனையிறவில் துண்டித்ததன் மூலம் குடாநாட்டிற்கான உலகத் தொடர்பினை அறவே துண்டித்தது. போராட்டத்தினால் முழு வளங்களும் உள்வாங்கப்படும் என்ற அறிவிப்புடன் புலிகளினால் யாழ்குடாநாடு ஆளுகைக்கு உட்படுத்தப்பட்டது. இக்கடற்பாதையில் பயணிப்பது சட்டவிரோதம் என அறிவித்த இலங்கையரசு பயணம் செய்த மக்களை தனது கடற்படையினால் சுட்டும், வெட்டியும், குண்டு வீசியும், ஷெல் அடித்தும் பல முறை படுகொலை செய்தும் கைது செய்து துன்புறுத்தியபோதும் வேறு வழியின்றி இப்பாதை வழியே பயணம் தொடர்ந்தது. சிற்றூரவை, வட்டவை, தமிழீழகாவல்துறை, தமிழீழநிர்வாக சேவை, தமிழீழநீதிமன்றுகள் என விரிவடைந்த ஆட்சி இயந்திரத்தில் புலனாய்வுத்துறையும், பகிரங்கப்பட்ட பகிரங்கப்படாத சிறைகளும் முக்கிய பங்கெடுத்த